TRAVEL DIARY - #OF OLD AGRAHARAM HOUSES AND VATHIMA FOOD @THIRUNALLAM @ KUMBAKONAM
ரதம் என்ற அமைப்பின் வாயிலாக கும்பகோணத்திற்கு ஒரு வழிகாட்டப்பட்ட ஆலய சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். சுற்றுப் பயணம் என்று சொல்வதை விட புனிதப் பயணம் அல்லது யாத்திரை என்று கொள்ளலாம் .
கும்பகோணத்திற்கு
அருகில் அமைந்துள்ள சிவஸ்தலங்களான துக்காச்சி, திருவீழ்மிழலை , மற்றும் கோனேரிராஜபுரம்
என்று மூன்று கோயில்களையும் , ஒரு சாதாரண சேவா செய்யும் சுற்று என்று இல்லாமல் , அந்த கோயில்களின், தொன்மை, வரலாறு, கோயில் சிற்பங்களின் வெளிப்பாடுகள் என்று விலாவாரியாக விளக்கினார் இந்த புனிதப்பயணத்தை
வழிநடத்திச்
சென்ற திரு. மதுசூதனன் கலைச்செல்வன் அவர்கள். மிகவும் அறிவுபூர்வமாகவும் , சுவாரஸ்யமாகவும் இருந்தது .
அன்றைய தினம் முன்பகல் காலத்தின் கடைசி கோயிலாக திருநல்லம் என்கின்ற கோனேரிராஜபுரத்தில் நிறுத்தினார்கள் . மதியஉணவும் , மத்தியான இடைவேளையும் இங்கே தான் என்றார்கள் . காரணம், இனி பார்க்கவேண்டிய கோயில்களெல்லாம் மாலை தான் நடை திறக்கும் . அதனால் இந்த ஏற்பாடு .
அன்று கோயிலில் ஏதோ விசேஷம் , நல்ல கூட்டம் . உலகிலேயே பெரிய நடராஜர் சிலை இருக்கும் கோயில் இது, மிகவும் புராதனமான கோயில். யாத்திரை மிகவும் சுவாரஸ்யமாக அமைந்ததனால் , கால் வலியோ! தோய்வோ!, களைப்போ ! தெரியவில்லை . ஆனால் , எப்பொழுது, இனி ரெண்டு மணி நேரம் ஒய்வு , இனி மாலை 4.30 மணிக்குத்தான் அடுத்த கோயில் என்று சொன்னார்களோ! இல்லையோ ! , உடனே பசியிலிருந்து , கால் வலியிலிருந்து , எல்லா உபாதைகளும் கவ்விக் கொண்டன .
கோனேரிராஜபுரம் கோயிலின் அடுத்துள்ள அக்ரஹாரத்தில் தான் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள் . மிகவும் அமைதியான , பாரம்பரியமிக்க வீடுகள், நிறைந்த அக்ரஹாரம். பாதி வீடுகள் அடைத்துக்கிடந்தன . இங்குள்ள பாதி பேர் வீட்டை அடைத்துப்போட்டுவிட்டு அமெரிக்கா சென்றிருப்பார்கள் போலும், மீதி பேர் இந்தியாவின் நகர வாழ்க்கையின் நரகத்துழன்று கொண்டிருப்பார்கள் போலிருக்கும் . ஆங்காங்கு கொஞ்சம் ஆடுகளும் , கோழிகளும் மேய்ந்து கொண்டிருந்தன. அதுதவிர மனித நடமாட்டம் ஒன்றும் இல்லை. அக்ரஹாரம் என்னவோ வெறிச்சோடித் தான் காணப்பட்டது .
அங்கு ஒரு தாழ்ந்த ஒட்டுக் கூரை போட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். வீடு, வெளியில் இருந்து பார்ப்பதற்கு சுமாராக இருந்தாலும், அதன் கோலம் போட்ட திண்ணைகளும், தேக்குத்தூண்களும், கம்பீரமான நிலை வாசலும் ஒரு பாரம்பரியத் தொன்மைக்கு அழைத்துச் சென்றது . நான் களைப்பை மறக்க ஆரம்பித்தேன் .
வீட்டிற்குள் போனவுடன் என்னில் ஏதோ ஒரு மாற்றம் !. ஏதோ தொலைத்ததை கிடைத்த சந்தோஷம்! ஒரு நாஸ்டால்ஜிக் பீல் ! நமக்கு
பரிச்சயப்பட்ட வீடு போலவே தோன்றியது. நான் வாழ்ந்த நாகர்கோயிலில், எனக்கு
பரிச்சயமான வடிவீஸ்வரம் , அக்ரஹாரத்தில், வீடுகள்
இப்படித்தான் இருக்கும். என்னுடைய நண்பன் கணபதி சுப்பனின் வீட்டிற்குச் சென்று ,
வெளியில் இருந்து பார்த்தால்
ஒரு நூறு மீட்டர் தூரத்திற்கு நீட்டமாய் கடைசிக் கொட்டில் வரை தெரியும்
. வெளியில் இருந்து கணபதீன்னு கூப்பிட்டால் , பாதி வீட்டில் இருந்து அவன் அம்மா கமலா மாமி தலையை நீட்டி பார்ப்பாள் . "அவன் இல்லேடா" என்பாள் .
வடிவை அக்ரஹாரம் முழுவதும் வீடுகள் இப்படித்தான் இருக்கும். இந்த
வீடும் ஏறக்குறைய அதேபோலத்தான் , அதே நீளமும் அதே அம்சமும், அதே உணர்வும் .
இந்த வீடு ஒரு நூற்றி ஐம்பது வருட பழக்கமிருக்கும் , நூறு வருடம் என்றால் , அந்த வீட்டில் எத்தனையோ நல்லது கேட்டது நடந்திருக்கும் !. எத்தனை பேரை பெத்திருக்கும்! ,எத்தனை பேர்களை வளர்த்து ஆளாக்கியிருக்கும்!, எத்தனை இழவுகளை பார்த்திருக்கும்! . வீடு ஒரு அனுபவம் தான், நாம் எதை மறந்தாலும் , நாம் வாழ்ந்த வீட்டை மறப்பதே இல்லை. அதனால் தான் நாம் வாழ்ந்த வீட்டை விற்கும் போது, நம்மை அறியாமலே மனதில் ஒரு கனம் வருகிறது . வளர்ந்த வீட்டை விற்று கையில் பணம் வாங்கும்போது, பணம் வருகிறதே ! என்று சந்தோஷமில்லாமல்,
ஒரு வருத்தத்தோடு தான் வாங்குவார்கள்.
வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் , அறைகளுக்கும்
பெயர் உண்டு . திண்ணை யில் ஆரம்பித்து , உள் திண்ணை , நடை , ரேழி
, தாவாராம் , மித்தம், அடுக்குளை, கொல்லை, கொட்டில் என்று வரிசையாக வீட்டின் பகுதிகள்
இருக்கும் . இது தவிர பாவுள், பரண் , பத்தாயம் அரங்கு , மச்சில் என்று வீட்டுக்கு வீடு சிறிய மாற்றங்களோடும் இருக்கும்.
"நா கொல்லைக்கு போறேன்!’
"அடுக்களை அப்பச்சியா இருக்கியேடி !"
"நீ தாவாரத்துல தூங்கினவனாச்சே!”
போன்ற சம்பாஷணைகள் மிகவும் பொதுவாகவும் , சாதாரணமாகவும் அங்கு கேட்கலாம்.
இதில் ரேழி என்பது இப்போது அபார்ட்மெண்ட்ஸ் களில் இருக்கும் லிவிங் ரூம் . வீட்டிற்கு வரும் விருந்தினர் , பக்கத்துக்கு வீட்டு பட்டாபி மாமா, என்று நீட்டா காபி குடிச்சு , வெத்தல பாக்கு போட்டு சிறிய பெரிய அரட்டைகள் நடக்கும் இடம் இது தான் , நவராத்திரி சமயத்தில கொலு வைக்கிறது எல்லாம் இங்கே தான். வீட்டுப் பெரியவர்கள் உறங்குவதற்கு கட்டில் போட்டிருப்பார்கள் , ஈசி செயர் இல்லாத ரேழி கிடையாது என்றே சொல்லலாம் . எல்லா நல்லது கெட்டதுகளும்
இங்கு தான் நடக்கும்.
மித்தம் என்பது வீட்டு நடுவே ஒரு சிறிய திறந்த வெளி , கை கால் அலம்பிக்கலாம் , மழை வந்தால் , தண்ணி பிடிக்கலாம் , சில சமயம் குளிக்கவும் செய்யலாம் . சில வீட்டில் துளசி மாடமும் வைத்திருப்பார்கள்
கொட்டில் என்பது வீட்டின் கடைசிப் பகுதி , பெரும்பாலும் மாடு கட்டி இருப்பார்கள். கொல்லையில் தான் கழிவறைகளும், குளியலறைகளும் இருக்கும், பெரும்பாலும் கிணறு கொல்லையிலோ , கொட்டிலிலோ தான் இருக்கும். பின்னால் ஒரு வாசல் இருக்கும் , துக்க வீட்டிற்குச் சென்று விட்டு வரும்போது இதன் வழியாகத் தான் வருவார்கள, அழுக்குத் துணி வெள்ளாவி வைக்கக் குடுக்க இதை பயன் படுத்துவார்கள் .
இந்த வீட்டின் அமைப்பும் ஏறக்குறைய அது போலத்தான் . வீட்டின் பின்னால் ஆறோ! அல்லது பொது குளமோ இருக்கும் , அதனால் குளித்து விட்டு பின் வாசல் வழியாக வரலாம் .
திண்ணையில் யார் வேண்டுமானாலும்
படுத்துக்கொள்ளலாம், வழிப்போக்கர்கள் , பக்கத்துக்கு வீட்டில் பொண்டாட்டி கூட சண்டைபோட்ட
கணவன்மார்கள் , பண்டாரங்கள் இப்படி! , ஆனால் நாளடைவில் திருடர்களும் வந்து படுத்துக்க
ஆரம்பித்தார்கள் , திண்ணைகள் காணாமல் போக ஆரம்பித்தன. திண்ணைகளுக்கு கம்பி க்ரில் போட
ஆரம்பித்தார்கள் .
உள்
திண்ணையில் இருந்தும் பேசலாம் . தயிர் காரி
வந்தால், யார் யாரோடு ஓடிப் போனார்கள் !, சடங்கு முதல் சாவு வரை , பள்ளத் தெருவுல பங்கஜம் மாமிக்கும் அவ மாட்டுப் பொண்ணுக்கும் உள்ள சண்டை வரை ஊரு விஷயம்
உலக விஷயம் கேட்டுத் தெரிந்து கொள்ள வசதியாக , உக்கார்ந்து பேசலாம் .இப்போது செருப்பு
போட வைத்திருக்கிறார்கள்.
ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா! இப்போது இருப்பது போல் இரண்டு பெட் ரூம் ,மூன்று பெட் ரூம் எல்லாம் அப்போது கிடையாது,. ஏன் ! படுக்கை அறை என்ற கருத்துருவே
கிடையாது . ப்ரைவசி என்பது அப்போது புழக்கத்தில் இல்லாத ஒரு சொல். எங்கு வேணும்னாலும் படுத்துக் கொள்ளலாம். ஆனாலும் தலைக்கு ஐந்து பிள்ளைகளுக்கு மேல் பெத்தார்கள் என்பது வேறு விஷயம் .
அப்போது மின் விசிறியோ , ஏர் கண்டிஷனரோ தேவையில்லாத காலம், வீடு எப்பொழுதுமே காற்றோட்டமாகவே இருக்கும் . காரணம்
மித்தம் , தாவாரம் என்ற வீட்டின் இரண்டு திறந்த வெளிப் பகுதிகள் , தாவாரம் என்பது தாழ்வாரதிலிருந்து
மறுவியதாக இருக்கலாம் . அடுக்குளைக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ இருக்கும் , முன்பு பாதி மூடி இருக்கும் , இப்போது முழுதுமாக மூடிவிட்டார்கள் . இதில் சமைப்பதற்குத் தேவையான விறகு , மண்எண்ணை , வறட்டி , முதலியனவற்றை அடுக்கி வைத்திருப்பார்கள் .
அடுக்(கு)களை தான் முழுநேர வேலை நடக்கும் இடம் , காலையில் இருந்து மாலை வரை , அடுப்பில் ஏதாவது வெந்து கொண்டிருக்கும் , அல்லது கொதித்துக்கொண்டிருக்கும். தேங்கா திருவுவது , மாங்கா அரிவது , மாவு ஆட்டுவது என்று ஏதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கும். அடுப்பங்கரையில் இருக்கும் அடுப்பு அசையா அடுப்புதான் , அணையா அடுப்பு தான் , விறகு வைத்து தான் சமைப்பார்கள் , சில சமயம் மரப்பொடி கட்டி சமைப்பார்கள் . காஸ் அடுப்பு வரப்போக இப்போது அமைதியாகி விட்டது.
அம்மி கல்லும் ஆட்டுக்கல்லும் பெரும்பாலும் அடுக்குளையின்
அசையா சொத்துக்கள் . கல் திருவை மட்டும் தனியாக வைத்திருப்பார்கள் .
இது தவிர பாவுள் என்றொரு அறை அடுக்குளையோடு சேர்ந்தோ அல்லது ரேழியோடு சேர்ந்தோ இருக்கும், இது ஒரு பாதுகாக்கப்பட்ட அறை இதில் உணவுப் பொருட்கள் , அரிசி , சமையலுக்குத் தேவையான பொருட்கள் முதலியவற்றை வைத்திருப்பார்கள் ,
எலி இல்லாத வீடு கிடையாது , அனைத்து எலிகளும் சங்கமிக்கும் இடமும் இந்த பாவுள் தான். .
இந்த அறையின் சாவி யும், ஒழுக்கரப்பெட்டியின் சாவியும் , அந்த வீட்டின் பிரதான கிரஹஸ்தியின் இடுப்பில் தான் இருக்கும். சாவி இருக்குமிடம் தான் அந்த
வீட்டின் ஆளுமை இருக்குமிடம் . ஒழுகரப்பெட்டி என்பது லாக்கர் , 'வெள்ளத்தால் அழியாது , வெண்தழலால் வேகாது' ரகம், அதுமட்டுமல்ல கரையானும் ஏறாது , கன்னமும் வைக்க முடியாது . வீட்டில் உள்ள அத்தனை ஸ்வர்ண ஆபரணங்களும் , பணம் பத்திரங்களும் பாதுகாத்து வைக்கப் படும் இரும்புப் பெட்டி. அந்த காலத்து திருடர்களுக்கு எல்லாம் ஒரு சிம்மசொப்பனமாக
இருந்த ஒரு சாதனம் .
பரண் என்பது அடுக்குளை சுவற்றின் மேலே அறை போல் இருக்கும் ஒரு லாஃப்ட் . அல்லது கூரைக்கும் , மச்சிலுக்கும் (மாடிக்கும் )இடையில் பழைய சாமானங்களை போட்டு வைக்கும் ஒரு சிறிய அறை. பொங்கல் டைம்ல வெள்ளை அடிக்கும் பொது இதை சுத்தம் செய்வார்கள் , பழைய உடைந்த செயர் , கட்டில், குடம் , என்று எல்லாம் கிடைக்கும், ஒவ்வொரு பொங்கலுக்கும் தூக்கி போடலாம் என்று நினைப்பார்கள் , அனால் , வெள்ளை அடித்து முடிந்தவுடன் திருப்பிபத்திரமாக பரண் மேல் போட்டுவிடுவார்கள் . தேடிப் பார்த்தால் , சில சமயம் சோழர் காலத்து வாள், கேடயங்கள் கிடைத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை . நாகர்கோயில் அருகே ஆத்தூரில் என்னுடைய சிநேகிதன் சிந்து நாத்தின் வீட்டுப் பரணில் ஒரு பழைய உழவு ஏரைப் பார்த்தேன் , அவனுடைய தாத்தாவோடதாம்!
பத்தாயம் என்று ஒன்று உண்டு , மரக்கட்டைப் பெட்டி போல இருக்கும் , அதிகம் தண்ணி புழங்காத இடத்தில் வைத்திருப்பார்கள் , அதற்கு தலை மேல் தான் துவாரம் இருக்கும் . நெல் போட்டு வைத்திருப்பார்கள் , தேவைப்படும்போது எடுத்து , அரிசியாக்க
அளந்து அனுப்புவார்கள். பத்தாயத்திற்கு உள்ளே போய் தான் நெல் கோரவேண்டும். பெரும்பாலும் சிறுவர்களை தான் உள்ளே அனுப்புவார்கள் , ரொம்ப நேரம் உள்ளே இருக்க முடியாது . உஷ்ணமாக இருக்கும் . பலாப்பழம் , வாழைத் தார் , மாங்காய் முதலியவற்றை பழுக்க வைக்க , நெல்லோடு சேர்த்து
உள்ளே வைத்து விடுவார்கள் . அது தவிர கள்ளன் போலீஸ் விளையாடும் போது ஒளிந்து கொள்ள நல்ல இடம். ராத்திரி திருட வந்த திருடர்கள் , வெளியே போக முடியாமல் பத்தாயத்தில் ஒளிந்து இருந்த கதைகள் ஏராளம் !>
தமிழ்நாட்டின் கிராமங்களின் தெருக்களில், நம்முடைய பண்பாட்டின் எச்சங்களின் மிச்சங்கங்களாக இந்த வீடுகளைப் பார்ப்பதில் மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. இனி எவ்வளவு காலம் இந்த வீடுகள் தாங்கும் என்று தெரியவில்லை. இந்த வீடுகளோடு இந்த வீடு சம்பந்தப்பட்ட சொற்களும் அழிந்து போகும் என்பது தான் வேதனையான விஷயம் . இப்படி அழிந்து போன சொற்கள் , பெயர்கள் ஏராளம்!
சாப்பிடக் கூப்பிட்டார்கள்!
ரேழி என்கின்ற லிவிங் ஹால் லில் தான் டேபிள் போட்டு சாப்பாடு பரிமாறினார்கள். நல்ல தலை வாழை இலை போட்டு சாப்பாடு
கிடைத்தது. திரு. மதுசூதனன் கலைச்செல்வன் அவர்கள், இந்த இலைச் சாப்பாட்டைப் பற்றியும் தகவல் சொல்லத்
தவற வில்லை !. இந்த உணவு' பதினெட்டு கிராம வாத்திமா ' என்ற ஒரு பிராமணாள் சமையல் முறையாம்!
இவர்கள் சோழர்காலத்திலேயே தஞ்சை , கும்பகோணம் பகுதியில் இருந்தவர்களாம் . கர்நாடக சங்கீத
மேதை செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், இந்த ஐயர்
வகையைச் சேர்த்தவர் என்று படித்தேன்
புளிசாதத்தில் ஆரம்பித்து, பருப்பு நேய்யில் தொடர்ந்து, கூட்டு, பொரியல், தயிர்
பச்சடி, பருப்பு உசிலி, இஞ்சிப்புளி கூட்டி,
தயிர் வரை, வடை பாயசத்தோட சாப்பிட்டவுடன் பசி தீர்ந்து ஆத்மா என்னா? என்று கேட்டது!
நாங்கள்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே , இந்த வீட்டுக்கு
ஏதோ விதத்தில் சம்பந்தப்பட்ட ஒரு மாமி, ' சங்கோஜப் படாமல் சாப்பிடுங்கோ ! என்று சொல்லிக்கொண்டே எங்களின் அருகே வந்தார் . அதில்
ஒரு ஆத்மார்த்தமான அக்கறை இருந்தது , அது மட்டுமல்ல 'சாப்பாடு நன்றாக இருக்கிறதா!'
என்று தைரியமாக ஒவ்வொரு இலை முன்பும் வந்து கேட்கும் போதே அவர்களின் சமையல் மீது உள்ள
ஆழமான நம்பிக்கை தெரிந்தது . அந்த அரைத்துவிட்ட
பாயசத்தை சுவைத்த நாக்கு" நீ இவ்வளவு நாள் எங்கிருந்தாய்?" என்று குளறியது .
காய்,
கூட்டு எல்லாம் கொஞ்சமாகத் தான் வைத்தார்கள் , ஆனால் மீண்டும் மீண்டும்
கேட்டு கேட்டு வைத்தார்கள் . உணவை வீணடிக்கக் கூடாது என்ற கிராமத்து அக்கறையும் , சாப்பிட்டவர்கள்
அந்த சாப்பாட்டிற்கு கொடுத்த மரியாதையையும் , சாப்பிட்டு முடித்த அனைவரின் இலையிலேயும்
தெரிந்தது .
ரொம்ப
நாளைக்கப்புறம் ஒரு சுவையான கல்யாணச் சாப்பாட்டை உட்கொண்ட வயிறு நன்றியுடன்
ஏப்பத்தை வெளிப்படுத்தியது!
சுவையான உணவும், ரம்யமான அந்த அக்ரஹாரத்து வீட்டுச் சூழலும்,
சாப்பிட்டு முடித்து விட்டு அந்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அடித்த அரட்டையும்,
பழைய நாகர்கோயில் நினைவுகளைக் கிளர்த்தியது!
அந்த நாளும் வந்திடாதோ! என்று மனம் ஏங்கியது.
-
7th of September 2025, with contributions
from Babu ( my classmate), Vanaja akka (Nagercoil nagarajacoil agaraharam ) ,
Deepa , Valli Nayaki (vadivai agraharam), Padmanaban(Ganapathy subban’s bro
from vadivai ) and Kolappan (my college mate
from Parakkai who is with ‘ The Hindu ‘ right now ) and thanx to my sister writer Sujatha Saravanan for proof reading!
Comments
Post a Comment